பாரிஸ்: நார்வே, ஐஸ்லாந்து, பின்லாந்து போன்ற உலகின் வடபகுதிகளில் குளிர்காலத்தின்போது வானத்தில் தோன்றும் வண்ணச் சுடரொளியை (அரோரா) காண்பதற்காகச் சுற்றுப்பயணிகள் பெரும்பணத்தைச் செலவழிக்க வேண்டும். மேலும், அப்பகுதியில் நிலவும் கடும்குளிரையும் அவர்கள் தாக்குப்பிடிக்க வேண்டியிருக்கும். ஆனால், கடந்த வார இறுதியில் உலகெங்கிலும் உள்ள பலர் இந்த அரிய வண்ணமயமான நிகழ்வைத் தங்கள் நாட்டிலேயே கண்டுகளித்தனர்.
அரோராவை மெக்சிகோ, தெற்கு ஐரோப்பா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் மே 10ஆம் தேதி மாலை கண்டனர். அந்நாட்டில் உள்ள மக்கள் அதனைக் கண்டு ரசித்ததோடு மட்டுமல்லாமல் அதனைப் படமெடுத்து சமூக ஊடகங்களிலும் பதிவிட்டனர்.
இதனால், இளஞ்சிவப்பு, ஊதா, பச்சை போன்ற ‘அரோரா’ வண்ணங்களால் சமூக ஊடகங்கள் நிரம்பி வழிந்தன.
ஆனால், இந்த வண்ணமயமான ‘அரோரா’வுக்குப் பின்னால் அதிர்ச்சியூட்டும் ஆபத்து ஒளிந்திருக்கிறது. ஆற்றல்மிக்க சூரியப் புயல்களால்தான் ‘அரோரா’ உருவாகிறது என்பது கசப்பான உண்மை.
“இந்த அழகுக்குப் பின்னால், ஆபத்து இருப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்,” என்று ஐரோப்பிய விண்வெளி நிலையத்தின் விண்வெளிப் பாதுகாப்புத் திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் குவென்டின் வெர்ஸ்பியர்ன், ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

