கியவ்: வடக்கு உக்ரேனின் சுமி வட்டாரத்தில் உள்ள மின் நிலையங்கள் போன்ற எரிசக்தி இலக்குகளை ரஷ்யாவின் ஆளில்லா வானூர்திகள் புதன்கிழமை அதிகாலைத் தாக்கி அழித்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
சுமி வட்டார ஆணையம் இதனை டெலிகிராம் தகவல் செயலியில் தெரிவித்தது.
அந்த வட்டாரத்தின் ஷோஸ்ட்கா மற்றும் கோனோடாப் நகரங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அது கூறியது. அவ்விரு நகரங்களும் கியவ் நகரின் வடகிழக்கே ரஷ்ய எல்லை அருகே அமைந்து உள்ளன.
எரிசக்தி இலக்குகள் தாக்கப்பட்டதன் விளைவாக சுமி வட்டாரத்தின் சில பகுதிகளில் மின்சார விநியோகம் தடைபட்டது.
இதற்கிடையே, ரஷ்யாவின் ஆளில்லா வானூர்திகளை உக்ரேனின் ஆகாயப் படை சுட்டு வீழ்த்தியதாக வட்டார அதிகாரிகள் கூறினர்.
இரவுநேரத் தாக்குதலில் ஈடுபட்டபோது 24 வானூர்திகளைத் தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக உக்ரேன் ராணுவம் கூறியது.

