தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ராஃபாவில் தாக்குதலை நிறுத்த இஸ்‌ரேலுக்கு உத்தரவிடக் கோரும் மனு மீது அனைத்துலக நீதிமன்றம் தீர்ப்பு

2 mins read
b5a58aa6-077a-4dc5-b1fe-afb5cc4d7648
ராஃபா மீது இஸ்‌ரேல் நடத்தும் தாக்குதலை நிறுத்த உத்தரவிடும்படி கோரும் தென்னாப்பிரிக்காவின் மனுவை, அனைத்துலக நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (மே 24) விசாரிக்கவிருக்கிறது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

த ஹேக்: ராஃபாவில் தாக்குதலை நிறுத்தி, காஸாவிலிருந்து வெளியேற இஸ்‌ரேலுக்கு உத்தரவிட வேண்டுமென்று தென்னாப்பிரிக்கா முன்வைத்துள்ள கோரிக்கை தொடர்பில் அனைத்துலக நீதிமன்றம், வெள்ளிக்கிழமை அன்று (மே 24) தீர்ப்பு வழங்க திட்டமிடப்பட்டது.

நெருக்கடி நேர நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படித் தென்னாப்பிரிக்க வழக்கறிஞர்கள் சென்ற வாரம் அனைத்துலக நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டனர்.

பாலஸ்தீன மக்கள் உயிர்வாழ ராஃபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

அனைத்துலக நீதிமன்றத்தின் தீர்ப்பு, சம்பந்தப்பட்ட தரப்புகளைக் கட்டுப்படுத்துவது என்றபோதும் கடந்த காலத்தில் அதன் தீர்ப்புகள் அலட்சியப்படுத்தப்பட்டதுண்டு. அனைத்துலக நீதிமன்றத்துக்கு அதன் தீர்ப்புகளை அமல்படுத்தும் அதிகாரம் இல்லை.

காஸாவில் இனப்படுகொலை நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்று இஸ்‌ரேல் தொடர்ந்து மறுத்துவருகிறது.

காஸாவில் தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அனைத்துலக நீதிமன்றத்தில் அது தெரிவித்தது. கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலைத் தாக்கிய ஹமாஸ் தீவிரவாதிகளைக் குறிவைத்தே தான் செயல்படுவதாக அது கூறியது.

“இஸ்‌ரேல் அதன் குடிமக்களைப் பாதுகாக்கவும் காஸாவில் ஹமாஸ் அமைப்பினரைக் கட்டுப்படுத்தவும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை உலகின் எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது,” என்று இஸ்ரேலிய அரசாங்கப் பேச்சாளர் வியாழக்கிழமை (மே 23) கூறினார்.

அந்நாட்டு ராணுவப் பேச்சாளர், ராஃபாவில் இஸ்‌ரேலிய ராணுவம் கவனத்துடனும் துல்லியமாகவும் செயல்படுவதாகக் கூறினார்.

இந்நிலையில், ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அனைத்துலக நீதிமன்றம் இஸ்ரேலுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கினால் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் அரசாங்கத்தின்மீது கூடுதலான அரசதந்திர நெருக்குதல்கள் சுமத்தப்பட அது வழிவகுக்கும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

இதற்கிடையே, ஐரோப்பிய நாடுகள் சில, பாலஸ்தீனத்தைத் தனி நாடாக அங்கீகரிப்பதாக மே 22ஆம் தேதி தெரிவித்தன.

இஸ்‌ரேலியப் பிரதமர், தற்காப்பு அமைச்சர், ஹமாஸ் தலைவர்கள் ஆகியோர் மீது கைதாணை பிறப்பிக்கும்படி மனுத் தாக்கல் செய்திருப்பதாக அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞர் கூறினார்.

போர்க் குற்றங்கள், மனிதநேயக் குற்றங்கள், இனப்படுகொலை ஆகியவற்றில் தனிநபர்களுக்குத் தொடர்பிருப்பதாகக் கூறப்படும் வழக்குகளை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்கும்.

அகதிகள் வாழும் நுசைரத் பகுதியில் அழிந்துபோன வீடு ஒன்றின் இடிபாடுகளுக்கு மேல் நிற்கும் பாலஸ்தீன சிறுவன்.
அகதிகள் வாழும் நுசைரத் பகுதியில் அழிந்துபோன வீடு ஒன்றின் இடிபாடுகளுக்கு மேல் நிற்கும் பாலஸ்தீன சிறுவன். - படம்: ஏஎஃப்பி
குறிப்புச் சொற்கள்