கியவ்: சிங்கப்பூரில் தொடங்கி உள்ள ஷங்ரி லா கலந்துரையாடல் மாநாட்டில் உக்ரேனிய அதிபர் வெலோடிமிர் ஸெலென்ஸ்கி வாரயிறுதியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதனை அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்து ஈராண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில் உக்ரேன் தொடர்ந்து தாக்குதலை எதிர்நோக்கி உள்ளது.
ஷங்ரிலா மாநாட்டில் உக்ரேனுக்கான பாதுகாப்பு உதவிகள் பற்றியும் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூரில் நடைபெறும் இந்த மாநாடு முதன்மை பாதுகாப்பு மாநாடாகக் கருதப்படுகிறது.
அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டினும் சீனாவின் தற்காப்பு அமைச்சர் டோங் ஜுன்னும் மாநாட்டில் பங்கேற்கும் முக்கியமானவர்களில் அடங்குவர்.
ஷங்ரிலா மாநாட்டில் சனிக்கிழமை ஸெலென்ஸ்கி உரையாற்றுவார் என்று இரண்டு தகவல் தரப்புகள் தெரிவித்தன.
இது ரகசியமான விவகாரம் என்பதால் அந்தத் தரப்புகள் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ள மறுத்தன.
இது தொடர்பாக சிங்கப்பூரில் உள்ள உக்ரேனிய தூதரகத்திடம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் எழுப்பிய கேள்விகளுக்கு அந்தத் தூதரகம் பதிலளிக்கவில்லை.
அதேபோல உக்ரேனின் கியவ் நகரில் உள்ள ஸெலென்ஸ்கி அலுவலகமும் இது தொடர்பாக எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் நடக்கும் பாதுகாப்பு தொடர்பான சந்திப்புகளில் 2022ஆம் ஆண்டு முதல் ரஷ்யப் பேராளர்கள் கலந்துகொள்ளவில்லை.
இதற்கிடையே, சுவீடனில் உள்ள ஸெலென்ஸ்கி கடந்த புதன்கிழமை கூறுகையில், அடுத்த மாதம் நடைபெற உள்ள அமைதி உச்சநிலைக் கூட்டத்தைச் சீர்குலைக்க ரஷ்யா தொடர்ந்து முயன்று வருவதாகவும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என நாடுகளுக்கு அது அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

