மாஸ்கோ: ரஷ்ய அரசு தமக்குத் தண்டனை விதிக்கும் என்ற அச்சத்தில் முன்னாள் உலகச் சதுரங்க வெற்றியாளர் கேரி கேஸ்பரோவ் கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவிலிருந்து தப்பி ஓடினார்.
இந்நிலையில், ‘வெளிநாட்டு முகவர்’ சட்டத்தை மீறிய குற்றத்துக்காக கேஸ்பரோவ் மீது ரஷ்யா குற்றச்சாட்டுகள் சுமத்தக்கூடும்.
கேஸ்பரோவ் மீது குற்றம் சுமத்த வலுவான காரணங்கள் இருப்பதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதுகுறித்து அவர்கள் கூடுதல் விவரங்கள் வெளியிடவில்லை.
ரஷ்ய அதிபர் விளாடிமியர் புட்டினைக் கடுமையாக விமர்சிப்பவரான கேஸ்பரோவ்வுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம் என்றும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கேஸ்பரோவ்வின் அலுவலகம் உடனடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை.
ரஷ்யாவுக்கு எதிராக வெளிநாட்டு முகவர்களாகச் செயல்படுவோர் பட்டியலில் கேஸ்பரோவ்வின் பெயரை ரஷ்யா சேர்த்துள்ளது.

