17,000 பேர் மலேசியாவுக்குள் நுழைய சிறப்பு அனுமதி தர வேண்டும்: பங்ளாதேஷ்

17,000 பேர் மலேசியாவுக்குள் நுழைய சிறப்பு அனுமதி தர வேண்டும்: பங்ளாதேஷ்

2 mins read
e798cb21-8cd9-4ab4-9715-baba00d1d18f
மலேசியா விதித்துள்ள காலக்கெடுவுக்குள் தங்கள் நாட்டின் ஊழியர்கள் செல்ல முடியவில்லை என்று பங்ளாதேஷ் அரசு கூறியுள்ளது. - கோப்புப் படம்: த ஸ்டார்

சிங்கப்பூர்: பங்ளாதேஷ், தனது நாட்டைச் சேர்ந்த 17,000 பேரை மலேசியாவுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

இவர்களுக்கு முன்னதாக மலேசியாவில் வேலை செய்வதற்கான வேலை அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் மே 31ஆம் தேதிக்குள் மலேசியாவுக்கு வந்தாக வேண்டும் என்று மலேசிய அரசாங்கம் காலக்கெடு விதித்திருந்ததாக ‘சேனல்நியுஸ்ஏஷியா’ தகவல் தெரிவித்தது.

இதனால் கடந்த வாரம் திடீரென வெளிநாட்டு ஊழியர்கள் மலேசியாவுக்கு வருவது இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்தது. கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அவர்களுடைய ஆவணங்களை பரிசீலித்து நாட்டுக்குள் அனுமதிக்க அதிக மனிதவளம் தேவைப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இன்னமும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் காலக்கெடுவுக்குள் மலேசியாவுக்குள் நுழைய முடியவில்லை என்று பங்ளாதேஷ் அனைத்துலக ஆள்சேர்ப்பு அமைப்பான (பிஏஐஆர்ஏ) கடந்த வாரம் கூறியது.

இந்த நிலையில் பங்ளாதேஷ் வெளிநாடுவாழ் குடிமக்களின் நலன் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துணை அமைச்சரான ஷோஃபிக்கர் ரஹ்மான் சவுத்ரி, மலேசியாவுக்குள் ஊழியர்கள் நுழைய ஒரு முறை சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாக ‘ஃபிரி மலேசியா டுடே’ தெரிவித்தது.

இத்தகைய ஊழியர்களின் எதிர்காலம் கோலாலம்பூரில் அவர்களுக்கு வேலை கிடைப்பதில்தான் இருக்கிறது என்றார் அவர். திரு ஷோஃபிக்கர் இந்த விவகாரம் தொடர்பில் பங்ளாதேஷுக்கான மலேசிய தூதரை சந்தித்துப் பேசவிருப்பதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஊழியர்களிடம் விமானங்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பது, நேர்மையற்ற முகவர்களால் ஆட்சேர்ப்பு கட்டணம் அதிகமாக வசூப்பது குறித்து பங்ளாதேஷ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்