சிட்னி: இரண்டு வயது சிறுமி ‘எச்5என்1’ வகை பறவைக் காய்ச்சலால் நோய்வாய்ப்பட்டதாக ஆஸ்திரேலியா கடந்த மே மாதம் தெரிவித்தது.
இவ்வகை பறவைக் காய்ச்சலைப் பொறுத்தவரை, இதுவே ஆஸ்திரேலியாவில் பாதிவாகியுள்ள முதல் பாதிப்பு.
இந்நிலையில், அந்தச் சிறுமி பிப்ரவரி மாதம் இந்தியாவின் கோல்கத்தா நகருக்குப் பயணம் மேற்கொண்டதாகவும் மார்ச் மாதம் 1ஆம் தேதி ஆஸ்திரேலியா திரும்பியதாகவும் உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
அச்சிறுமி மார்ச் மாதம் 2ஆம் தேதியன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இரண்டு வாரங்களுக்கு மேல் தங்கி சிகிச்சை பெற்றுக்கொண்டார்.
மே 22ஆம் தேதி நிலவரப்படி, அவருடன் இந்தியாவில், ஆஸ்திரேலியாவில் நெருங்கிய தொடர்பில் இருந்த குடும்பத்தாருக்கு பறவைக் காய்ச்சல் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் இல்லை என்று உலகச் சுகாதார நிறுவனம் கூறியது.
இந்நோயால் பாதிக்கப்பட்ட மனிதர்கள், விலங்குகளுடன் சிறுமி தொடர்பில் இருக்கவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

