புத்ராஜெயா: மலேசியாவில் திங்கட்கிழமை (ஜூன் 10) நள்ளிரவு முதல் டீசல் விலை உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில்லறை விற்பனையில் அதன் விலை லிட்டருக்கு 3.35 ரிங்கிட்டாக (சிங்கப்பூரின் 97 காசுக்குச் சமம்) இருக்குமென்று மலேசிய இரண்டாம் நிதியமைச்சர் அமிர் ஹம்சா அஸிஸான் கூறியுள்ளார்.
மே மாதத்துக்கான தானியக்க விலை நிர்ணய முறையின் அடிப்படையில் டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
முன்னதாக ஜூன் 5ஆம் தேதி டீசல் விலை லிட்டருக்கு 2.15 ரிங்கிட்டாக இருக்குமென்று அறிவிக்கப்பட்டது. சாபா, சரவாக், லபுவான் ஆகியவற்றில் அதே விலை நடப்பில் இருக்குமென்று கூறப்பட்டது.
மே 21ஆம் தேதி எரிபொருள் மானியம் குறித்துப் பேசிய மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், பணக்காரர்களுக்கும் வெளிநாட்டினருக்கும் டீசல் மானியம் ரத்து செய்யப்படும் என்று கூறினார்.
முதலில் தீபகற்ப மலேசியாவில் இது நடப்புக்கு வரும் என்று கூறிய அவர், சாபா, சரவாக் மாநிலங்களில் பின்னர் அமலுக்கு வரும் என்றார்.
பொருள், சேவைக் கட்டண உயர்வு கடுமையாக அதிகரிப்பதைத் தவிர்க்கும் நோக்கில், டீசலில் இயங்கும் வர்த்தக வாகனங்களுக்கும் பொதுப் போக்குவரத்திற்கும் டீசல் மானியம் தொடரும் என்று திரு அன்வார் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
பேருந்து, டாக்சி உள்ளிட்ட 10 வகையான பொதுப் போக்குவரத்து வாகனங்களும் 23 வகையான சரக்குப் போக்குவரத்து வாகனங்களும் டீசல் மானியத் திட்டத்தின்கீழ் தொடர்ந்து பயனடையும்.
மீனவர்களில் சில பிரிவினருக்கும் டீசல் மானியம் தொடர்ந்து வழங்கப்படவிருக்கிறது.
டீசலில் இயங்கும் தனியார் வாகன உரிமையாளர்களில் தகுதிபெறுவோர்க்கு ரொக்க உதவியும் வழங்கப்படும் என்று பிரதமர் அன்வார் தெரிவித்திருந்தார். சிறு வணிகர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் இந்தப் பிரிவில் அடங்குவர்.

