பாரிஸ்: ஐரோப்பிய ஒன்றியத் தேர்தலில் வலதுசாரி கட்சியிடம் படுதோல்வி அடைந்துள்ள பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோன், பிரெஞ்சு நாடாளுமன்றத் தேர்தல் இம்மாதம் நடைபெறும் என்று திடீரென அறிவித்துள்ளார்.
அதிபர் மெக்ரோனின் இந்த முடிவு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் இம்மாதம் நடத்தப்பட்டால் அதில் அதிபர் மெக்ரோன் தோல்வி அடைவதற்கான சாத்தியம் அதிகம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அடுத்த தேர்தலை நடத்த இன்னும் மூன்று ஆண்டுகள் இருக்கும் நிலையில் அதிபர் மெக்ரோனின் இந்த முடிவு வியப்பளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, ஐரோப்பிய ஒன்றியத் தேர்தலில் தமக்கு ஏற்பட்ட தோல்வியைப் புறக்கணித்துவிட முடியாது என்று அதிபர் மெக்ரோன் கூறினார்.
கீழவைத் தேர்தல் ஜூன் 30ஆம் தேதி நடைபெறும் என்றும் இரண்டாம் கட்ட வாக்களிப்பு ஜூலை 7ஆம் தேதியன்று நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

