பெர்ன்: சுவிட்சார்லாந்தில் வரும் சனிக்கிழமை (ஜூன் 15) முதல் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 16) வரை உக்ரேன் மாநாடு நடைபெறவுள்ளது.
அதில் பங்கேற்க மொத்தம் 90 நாடுகளும் அமைப்புகளும் விண்ணப்பித்துள்ளதாக சுவிட்சர்லாந்து அரசாங்கம் திங்கட்கிழமையன்று (ஜூன் 10) தெரிவித்தது. உக்ரேனில் அமைதியைக் கொண்டு வருவது மாநாட்டின் நோக்கமாகும்.
சுவிட்சர்லாந்தின் பர்கன்ஸ்டாக் சுற்றுலாத் தலத்தில் நடைபெறவிருக்கும் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. எனினும், வருங்காலத்தில் இடம்பெறக்கூடிய அமைதி நடவடிக்கையில் ரஷ்யா, உக்ரேன் இரண்டையும் ஈடுபடுத்துவதற்கு வழிவகுக்கும் திட்டத்தை வரைவது மாநாட்டின் இலக்கு என்று சுவிட்சர்லாந்து அரசாங்கம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.
உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியின் வேண்டுகோளுக்கு இணங்க கடந்த ஜனவரி மாதம் சுவிட்சர்லாந்து, இம்மாநாட்டை ஏற்று நடத்த ஒப்புக்கொண்டது. உக்ரேன் மாநாடு, நேரத்தை வீணடிக்கும் நடவடிக்கையாகும் என்று ரஷ்யா சாடியுள்ளது.
மாநாட்டில் பங்கேற்பதில் ரஷ்யா அக்கறை காட்டாததால் அதற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று சுவிட்சர்லாந்து தெரிவித்தது. எனினும், அமைதி நடவடிக்கையில் ரஷ்யா இடம் பெறவேண்டும் என்றும் அது வலியுறுத்தியது.

