வூஹான்: வூஹான் நகரின் பரப்பரப்பான சாலைகளில் உலகிலேயே ஆகப் பெரிய அளவில் ஓட்டுநர் இல்லா டாக்சிகள் சோதிக்கப்பட்டு வருகின்றன.
எட்டு வழித் தடங்களைக் கொண்ட நெடுஞ்சாலைகளும் யங்ட்சே ஆற்றில் கட்டப்பட்ட உயரமான பாலங்களும் 11 மில்லியனுக்கு மேல் மக்கள் வசிக்கும் வூஹானில் இந்த ஓட்டுநர் இல்லா டாக்சிகள் வலம் வருகின்றன.
ஏறக்குறைய 500 டாக்சிகளை கணினிகள் வழி நடத்துகின்றன. பாதுகாப்புக்குக்கூட காரில் ஓட்டுநர்கள் இருப்பதில்லை.
இந்த டாக்சிகளை, சீனாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான பைடு நடத்துகிறது.
வூஹானில் ‘ரோபோ டாக்சி’ என்று அழைக்கப்படும் இந்தச் சேவையில் மேலும் ஆயிரம் டாக்சிகளை சேர்க்கப்போவதாக அது அறிவித்துள்ளது.
சீனா முழுவதும் 16 அல்லது அதற்கு மேற்பட்ட நகர்களின் பொது சாலைகளில் ஓட்டுநர் இல்லா டாக்சிகளை சோதிக்க பல்வேறு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து குறைந்தது 19 சீன வாகனத் தயாரிப்பு மற்றும் வாகன விநியோக நிறுவனங்கள் இந்தத் தொழிலில் போட்டி போட்டு வருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
இத்தகைய நிறுவனங்களுக்கு அரசாங்கமும் குறிப்பிடத்தக்க உதவிகளை செய்து வருகிறது.
ரோபோ டாக்சிகள் சோதிப்பதற்கு அனுமதிக்கப்பட்ட நகரங்களில் புதிய தொழில்நுட்பத்தைப் பற்றிய அச்சத்தைப் போக்குவதற்காக அது தொடர்பான பாதுகாப்பு சம்பவங்கள் மற்றும் விபத்துகள் பற்றிய விவாதங்களை தணிக்கையாளர்கள் கட்டுப்படுத்தி வருகின்றனர்.
ஜே.டி. பவர் என்ற வாகன ஆலோசனை நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஆய்வுகளில் தங்கள் கார்களை கணினிகள் வழிநடத்துவதை அமெரிக்கர்களைவிட சீன ஓட்டுநர்கள் அதிக விருப்பத்துடன் இருப்பது தெரிய வந்துள்ளது.
ஓட்டுநர் இல்லா கார்களின் வளர்ச்சியில் சீனா முன்னணியில் இருப்பதற்கு மற்றொரு காரணம், அதன் கடுமையான, கட்டுப்பாடான தரவுகள் ஆகும்.

