மாஸ்கோ: ரஷ்யாவின் தெற்குப் பகுதியில் உள்ள ரோஸ்டோவ் வட்டாரத்தில் இருக்கும் தடுப்புக் காவல் நிலையம் ஒன்றில் ஆடவர்கள் அறுவர், காவலர்கள் சிலரைப் பிணைபிடித்து வைத்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூன் 16) ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்தன.
அந்த அறுவரில் சிலர் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் சிலர், பயங்கரவாத குற்றங்களைப் புரிந்தவர்கள் ஆவர்.
அவர்கள் சிறை அறை ஒன்றின் சன்னல் கண்ணாடிகளை அகற்றி, காவலர் அறைக்குள் சென்று, குறைந்தது இரு சிறைக் காவலர்களைப் பிணைபிடித்ததாக பாஸா டெலிகிராம் ஊடகப் பக்கம் கூறியது. இச்செயலில் ஈடுபட்ட கைதிகள் சிலர் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு வைத்துக்கொண்டவர்கள் என்றும் ரஷ்ய அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகங்கள் குறிப்பிட்டன.
கடந்த மார்ச் மாதம் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை அரங்கின்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது.
நீதிமன்ற விசாரணைக்கு முன்பு தடுப்புக் காவலில் வைக்கப்படுவோருக்கான நிலையத்தில் குறைந்தது இரு ஊழியர்கள் பிணைபிடிக்கப்பட்டதாக ரஷ்ய சிறைச் சேவை கூறியிருந்தது. நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் நிலையம் வழக்கத்தைப் போல் இயங்குவதாகவும் அது குறிப்பிட்டது.

