ஜோகூர் காவல்நிலையத் தாக்குதல்: சந்தேக நபரின் குடும்பத்தினர் மீது குற்றச்சாட்டு

ஜோகூர் காவல்நிலையத் தாக்குதல்: சந்தேக நபரின் குடும்பத்தினர் மீது குற்றச்சாட்டு

2 mins read
c95e876e-da77-4e1c-9a80-5f24009acedb
தாக்குதல்காரரின் குடும்பத்தைச் சேர்ந்த ரோஸ்னா ஜந்தன், 59, புதன்கிழமை ஜோகூர் பாரு நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். - படம்: த ஸ்டார்
Google News Preferred Icon

ஜோகூர் மாநிலத்தின் உலு திராம் காவல் நிலையத்தில் தாக்குதல் நடத்தியவரின் குடும்பத்தினர் மீது, பயங்கரவாதத்துக்குத் துணைபுரிந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.

அவரது குடும்பத்தினர் ஐவர் மீது ஒன்பது குற்றச்சாட்டுகளை ஜோகூர் பாருவில் உள்ள அமர்வு நீதிமன்றம் புதன்கிழமை (ஜூன் 19) குற்றம் சுமத்தியது.

ராடின் இம்ரான் ராடின் முகம்மது யாசின், 62, அவரது சிங்கப்பூர் மனைவி ரோஸ்னா ஜந்தன், 59, அந்தத் தம்பதியரின் பிள்ளைகளான ராடின் ரோமியுல்லாஹ் ராடின் இம்ரான், 34, ஃபர்ஹாஹ் சோப்ரினா ராடின் இம்ரான், 23, மரியா ராடின் இம்ரான், 19, ஆகியோர் அந்த ஐவர்.

இவர்கள் அனைவரும் புதன்கிழமை வெவ்வேறு வாகனங்களில் கடுமையான பாதுகாப்புடன் ஜோகூர் பாரு நீதிமன்ற வளாகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

நீதிமன்றத்தில் அவர்களைப் பிரதிநிதித்து யாரும் வாதாடவில்லை. அமர்வு நீதிமன்ற நீதிபதி செ வான் ஸைடி செ வான் இப்ராஹிம் முன்னிலையில் ஐவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது.

ராடின் இம்ரான் நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் சித்தாந்தங்களை தமது குடும்பத்தில் கலந்ததன் மூலம் பயங்கரவாதச் செயல்களைத் தூண்டுவதாக அவர் மீது சுமத்தப்பட்ட முதல் குற்றச்சாட்டு தெரிவிக்கிறது.

2014ஆம் ஆண்டு இறுதிக்கும் 2024 மே 17க்கும் இடைப்பட்ட காலத்தில் கம்போங் சுங்கை திராம் வட்டாரத்தில் ஜாலான் ரபானியில் உள்ள வீடு ஒன்றில் அந்தச் சித்தாந்தங்களை தமது குடும்பத்தினரிடம் அவர் பரப்பியதாகவும் உலு திராம் காவல் நிலையத்தைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 21 வயது ராடின் லுக்மானும் அவர்களுள் ஒருவராக இருந்தார் என்றும் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் நடவடிக்கைகளுக்காக நான்கு நாட்டுத் துப்பாக்கிகளை அதே இடத்தில் பதுக்கி வைத்ததன் மூலம் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக இரண்டாவது குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

பயங்கரவாதச் சித்தாந்தங்களைப் பரப்புவது மலேசியாவின் தண்டனைச் சட்டம் 574 பிரிவு 130ஜி(ஏ)ன்கீழ் குற்றமாகும். அந்தக் குற்றத்திற்கு 30 ஆண்டு வரையிலான சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாஜோகூர் பாருஉலு திராம்