கோலாலம்பூர்: மலேசியாவில் ஆங்கிலப் புலமையை அதிகரிக்க சிங்கப்பூரில் இருந்து தொண்டூழியர்களை வரவழைக்கும் யோசனையை மலேசிய கல்வி அமைச்சர் ஃபட்லினா சித்திக் வரவேற்றுள்ளார்.
அந்த முயற்சி மலேசியாவில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கூடங்களிடம் புத்தாக்க அணுகுமுறையை ஏற்படுத்துவதுடன் ஆற்றல்மிக்க கற்றல், கற்பித்தல் நடைமுறைகளுக்கான மதிப்பை கூட்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அமெரிக்கா, கொரியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் ஆசிரியர்களுடன் பகிர்ந்துகொண்ட அதுபோன்ற திட்டங்கள் மலேசிய கல்வி அமைச்சின் வரலாற்றில் நீண்டகாலமாக இடம்பெற்று உள்ளன,” என்று அவர் வியாழக்கிழமை (ஜூன் 20) தெரிவித்தார்.
சுங்கை ஜாவியில் உள்ள எஸ்கே சுங்கை பக்காப் பள்ளியில் திட்டம் ஒன்றில் தொடக்க நிகழ்வில் உரையாற்றுகையில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
சிங்கப்பூரைச் சேர்ந்த தொண்டூழிய ஆசிரியர்களால் நகர, கிராமப்புற, தொலைதூர ஊர்கள் உள்ளிட்ட வசதிகுறைந்த பகுதிகளுக்குப் பலனளிக்கும் என்றார் திருவாட்டி ஃபட்லினா. குறிப்பாக, சாபா மற்றும் சரவாக் மாநிலங்கள் பலனடையும் என்றார் அவர்.
அதேநேரம், சிலர் ஊகமாகத் தெரிவித்துள்ளதற்கு மாறாக இந்த முயற்சிக்கு கூடுதல் செலவு ஏற்படாது என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார். மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான வலுவான அரசதந்திர உறவை அவர் மேற்கோள் காட்டினார்.
“தொண்டூழிய ஆசிரியர்களுக்கான செலவை சிங்கப்பூர் அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும்,” என்றும் அமைச்சர் ஃபட்லினா தெரிவித்தார்.
சிங்கப்பூரில் இருந்து ஆசிரியர்களை வேலைக்கு அமர்த்தும் திட்டம் மலேசியாவுக்கு இருப்பதாக இதற்கு முன்னர் வெளியான தகவலை பிரதமர் அன்வார் இப்ராகிம் மறுத்திருந்தார். தொண்டூழிய அடிப்படையிலேயே ஆசிரியர்கள் வரவழைக்கப்படுவார்கள் என்று கூறிய அவர், ஆங்கிலப் புலமையைப் பேணவும் மலேசிய-சிங்கப்பூர் உறவுகளைப் பலப்படுத்தவும் அந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

