கோலாலம்பூர்: மலேசிய இந்தியர் காங்கிரஸ் (எம்ஐசி) கட்சியின் துணைத் தலைவராகத் திரு எம்.சரவணன் (படம்) மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது.
2024லிருந்து 2027ஆம் ஆண்டு வரையிலான காலத்திற்கு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்க எம்ஐசி வாக்கெடுப்பு நடத்தத் திட்டமிட்டிருந்தது. அதில் திரு சரவணனை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் அவரே அப்பொறுப்பை மீண்டும் வகிப்பார்.
வாக்களிப்புக்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய சனிக்கிழமை (ஜூன் 22) பிற்பகல் ஒரு மணி வரை கெடு விதிக்கப்பட்டிருந்தது. வேட்புமனுத் தாக்கல் செய்ய வேறு யாரும் முன்வராததால் திரு சரவணனே தொடர்ந்து துணைத் தலைவர் பொறுப்பை வகிப்பார் என்று எம்ஐசி தலைவர் எஸ். ஏ. விக்னேஸ்வரன் அறிவித்தார்.

