வாஷிங்டன்: அமெரிக்காவை உலுக்கி வரும் கடும் வெப்பத்தால் 100 மில்லியனுக்கும் மேற்பட்டோர் அவதிப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் கிழக்குக் கடலோரப் பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பநிலை உயர்ந்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் மேற்குப் பகுதியிலும் கடும் வெப்பத்தால் அங்குள்ள மக்கள் சிரமப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 23ஆம் தேதி நிலவரப்படி, பால்ட்டிமோர், பிலடேல்ஃபியா நகரங்களில் வெப்பநிலை கிட்டத்தட்ட 38 டிகிரி செல்சியசாகப் பதிவானது.
ஐடஹோ, மொன்டேனா, வியோமிங் ஆகிய மாநிலங்களில் வெப்பநிலை 30 டிகிரி செல்சியசுக்கும் 40 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டு இருந்தது.
இது அங்குள்ள வழக்கமான வெப்பநிலையைவிட ஏறத்தாழ 8 டிகிரி செல்சியஸ் அதிகம்.
ஜூன் 24ஆம் தேதி நிலவரப்படி நெபிராஸ்கா, கென்சஸ் ஆகிய மாநிலங்களில் வெப்பநிலை அதிகரித்திருப்பதாக அமெரிக்காவின் தேசிய வானிலை சேவை கூறியது.

