பாரிஸ்: காங்கோ ஜனநாயகக் குடியரசில் மனிதர்களிடையே எளிதில் பரவக்கூடிய புதிய உயிர்கொல்லி குரங்கம்மை கிருமியின் திரிபு பரவி வருகிறது. அங்கு கருச்சிதைவுகளையும் சிறார் உயிரிழப்புகளையும் இந்தப் புதிய கிருமித் திரிபு ஏற்படுத்தியது. இதனிடையே, அந்தக் கொடிய கிருமித் திரிபு ஏற்கெனவே அண்டை நாடுகளுக்குப் பரவியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தப் புதிய கிருமி திரிபு மற்ற இடங்களுக்குப் பரவுவதற்கு முன்பு அனைத்து நாடுகளும் அதை எதிர்கொள்ளத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என ருவாண்டா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் ஜான் கிளாட் உடஹெமுகா ஏஎஃப்பியிடம் தெரிவித்தார்.
2022ஆம் ஆண்டு 110க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி, ஓரினச்சேர்க்கையாளர்கள், இருபாலின ஆண்கள் ஆகியோரை பாதித்த குரங்கம்மை ‘கிளேட் II’ கிருமித் திரிபைவிட இந்தப் புதிய திரிபு மிகவும் அபாயகரமான பாதிப்பை ஏற்படுத்தும் எனத் திரு உடஹெமுகா கூறினார்.
காங்கோவின் தென் கிவு பகுதியில் 1,000க்கும் மேற்பட்டவர்கள் ‘கிளேட் Iபி’ என அழைக்கப்படும் இந்தப் புதிய கிருமித் திரிபால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.