லெபனானை கற்காலத்துக்குத் தள்ளமுடியும்: இஸ்ரேல் கொக்கரிப்பு

லெபனானை கற்காலத்துக்குத் தள்ளமுடியும்: இஸ்ரேல் கொக்கரிப்பு

1 mins read
a54fd88e-2107-49fb-a41e-59d901b9cfcb
தென்லெபனானில் அணிவகுத்துச் செல்லும் போர் வாகனங்கள். - படம்: இபிஏ

வாஷிங்டன்: அண்டை நாடான லெபனானுடன் போரை விரும்பவில்லை என்று இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.

இருப்பினும் தன்னால் லெபனானை பழைய கற்காலத்துக்குக் கொண்டு செல்ல முடியும் என்றும் இஸ்ரேலிய தற்காப்பு அமைச்சர் யோயாவ் கேலன்ட் தெரிவித்து உள்ளார்.

அமெரிக்கப் பயணம் மேற்கொண்ட அவர் வாஷிங்டனில் புதன்கிழமை (ஜூன் 26) செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறினார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், “போரை நாங்கள் விரும்பவில்லை. ஆயினும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் எங்களை நாங்கள் தயார்ப்படுத்தி வருகிறோம்.

“போர் தொடங்கினால் லெபனானுக்குப் பெருத்த சேதத்தை ஏற்படுத்த எங்களால் இயலும் என்பதை ஹிஸ்புல்லா போராளிகள் நன்கு தெரிந்து வைத்திருப்பார்கள்,” என்றார் அவர்.

2023 அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் படையினர் இஸ்ரேலைத் தாக்கினர். அதன் காரணமாக காஸாவில் போர் நீடித்து வருகிறது.

ஹமாஸின் நட்பு அமைப்பான ஹிஸ்புல்லாவுக்கு ஈரான் ஆதரவு உண்டு. இரு நாட்டு எல்லையில் அன்றாடம் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு வருகிறது.

லெபனான் மீதான தாக்குதல் திட்டத்துக்கு இஸ்ரேல் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து எல்லைத் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றன.

இதற்கிடையே, இரு நாடுகளின் பூசல், பேரழிவுக்கு இட்டுச் செல்லும் சாத்தியம் இருப்பதாக ஐநா மனித உரிமைக் குழுவின் தலைவர் எச்சரித்து உள்ளார்.

குறிப்புச் சொற்கள்