டென்பசார்: பாலித் தீவில் இணையக் குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 103 தைவானிய பாஸ்போர்ட் வைத்துள்ளவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்தோனீசிய குடிநுழைவுத் துறை வெள்ளிக்கிழமை (ஜூன் 28) தெரிவித்தது.
ஆனால் அவர்களில் 14 பேர் மட்டுமே தமது நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தைவான் கூறியுள்ளது.
ஜூன் 26ஆம் தேதி நடைபெற்ற சோதனையில் 2024ஆம் ஆண்டில் மிகப்பெரிய எண்ணிக்கையில் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது என்று குடிநுழைவுத் துறை கூறியது.
பாலியின் டபனான் மாவட்டத்தில் ஒரு மாளிகையில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். தைவானிய பாஸ்போர்ட் வைத்துள்ள அனைவரும் விரைவில் நாடு கடத்தப்படுவார்கள் என்று குடிநுழைவுத் துறை இயக்குநர் சஃபார் முஹமட் கோடம் தெரிவித்தார்.
மாளிகையில் தங்கிய 103 வெளிநாட்டவர்களும் சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அவர்கள் இணையக் குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம் என்று செய்தியாளர் கூட்டத்தில் மடிகணினி, இணையத் தொடர்பு சாதனங்களை வெளியிட்டு அவர் கூறினார்.
கைது செய்யப்பட்டவர்கள் விசாவைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே பாலிக்கு தூதரக அதிகாரி ஒருவரை அனுப்பி விசாரணை முடிந்த பிறகு சந்தேக நபர்களை தமது நாட்டுக்கு அனுப்பும்படி இந்தோனீசியாவிடம் கேட்டுக் கொள்ளப்படும் என்று தைவானிய அமைச்சு தெரிவித்தது.

