அபுஜா: நைஜீரியாவின் ஜோஸ் நகரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் வகுப்புகள் வழக்கம்போல நடைபெற்று கொண்டிருந்தபோது, பள்ளியின் 2 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது.
இடிபாடுகளில் சிக்கி குறைந்தது 22 மாணவர்கள் உயிரிழந்தனர்.
நூற்றுக்கும் மேற்பட்டோரை இடிபாடுகளில் இருந்து உள்ளூர் மக்களும், மீட்புப் படையினரும் இணைந்து மீட்டுள்ளனர். கட்டடம் இடிந்து விழுந்தபோது 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கியதாகவும் அவர்களில் 22 மாணவர்கள் உயிரிழந்ததாகவும் 130க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த மாணவர்கள் அனைவரும் அருகில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்கள் கூறினர்.
உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, கட்டணம் இல்லாமல் சிகிச்சை அளிக்குமாறு மருத்துவமனைகளுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது என்று தகவல் ஆணையர் மூசா அஷோம்ஸ் தெரிவித்துள்ளார்.
தரக்குறைவான கட்டுமானப் பொருள்கள், மோசமான பராமரிப்பு போன்றவையே இத்தகைய அசம்பாவிதங்களுக்குப் பெரும்பாலும் காரணம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

