சுலாவேசி: ‘முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?’ எனக் காலங்காலமாக கேட்கப்பட்டு வரும் கேள்வியால் எழுந்த வாக்குவாதம் காரணமாக, இந்தோனீசியாவில் தம் நண்பரை ஆடவர் ஒருவர் குத்திக் கொன்றதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு சுலாவேசியின் தொங்குனோ மாவட்டத்தில் உள்ள கிராம் ஒன்றில் ஜூலை 24ஆம் தேதி கதிர் மார்குஸ் எனும் 47 வயது ஆடவரைச் சந்தேக ஆடவர் 15 முறை கத்தியால் குத்திக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
அந்தச் சமயத்தில் இருவரும் மதுபோதையில் இருந்ததாகக் காவல்துறை கூறியது. டிஆர் எனப் பெயரின் முதல் எழுத்துகளால் அடையாளப்படுத்தப்பட்ட அந்தச் சந்தேக ஆடவர், திரு கதிரிடம் கோழி-முட்டை கேள்வியை முன்வைத்தார்.
இருவருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டதைத் தொடர்ந்து, திரு கதிர் அங்கிருந்து புறப்பட்டார். எனினும், சினமடைந்த டிஆர், வீட்டிற்கு ஓடி கத்தியை எடுத்து வந்து நண்பரைக் குத்திவிட்டார்.
இச்சம்பவத்தை உறுதிப்படுத்திய தொங்குனோ காவல்துறைத் தலைவர் இப்து அப்துல் ஹசன், சந்தேக ஆடவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.