கோலாலம்பூர்: மலேசிய அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக வாட்ஸ்அப்பில் எந்தச் செய்தியும் வெளியிடவில்லை என்று அந்நாட்டின் நிதி அமைச்சு அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இத்தகைய பொய்ச் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அது மலேசியர்களுக்கு அறிவுறுத்தியது.
சம்பள உயர்வு தொடர்பாக ஜூலை 25ஆம் தேதி வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்பட்ட செய்தி உண்மையல்ல என்று அமைச்சு வலியுறுத்தியது.
ஆக அண்மைய, துல்லியமான செய்திகளைப் பெற நிதி அமைச்சின் அதிகாரபூர்வ இணைய வாசலையும் அதன் சமூக ஊடகப் பக்கங்களையும் நாடுமாறு அமைச்சு கேட்டுக்கொண்டது.
ஜூலை 25 தேதியன்று வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் செய்திகள் அமைச்சின் ஃபேஸ்புக் பதிவின் பின்னிணைப்பாகச் சேர்க்கப்பட்டன.
அரசு ஊழியர்களின் பதவியைப் பொறுத்து சம்பளம் உயர்த்தப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதுதொடர்பான விவரங்களும் அதில் இடம்பெற்றிருந்தன.
இதுதொடர்பாக ஆகஸ்ட் 16ஆம் தேதியன்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவிப்பார் என்றும் அந்த வாட்ஸ்அப் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
இது உண்மையல்ல என்று நிதி அமைச்சு கூறியது.
அரசு ஊழியர்களின் சம்பளம் 13 விழுக்காட்டுக்கும் அதிகமாக உயர்த்தப்படும் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் அண்மையில் அறிவித்திருந்தார்.