ஜெருசலம்: ஜூலை 4ஆம் தேதி தொடங்கும் புதிய வாரம் இஸ்ரேலுக்கு நிச்சயமற்ற வாரமாக விளங்குகிறது.
ஈரான் ஆதரவு போராளி அமைப்புகள் ஏற்கெனவே தங்கள் தாக்குதல்களால் பலருக்கு இடையூறுகள் ஏற்படுத்தி வரும் நிலையில், ஈரானும் எந்நேரமும் இஸ்ரேலைத் தாக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.
ஈரான், அதன் போராளி அமைப்பான ஹிஸ்புல்லா அமைப்பு ஆகியவை இஸ்ரேலைத் தாக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் பல அனைத்துலக விமானச் சேவை நிறுவனங்கள் இஸ்ரேலுக்கான விமானச் சேவையை நிறுத்தி வைத்துள்ளன.
இதனால், பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் தங்கள் நாட்டுக்கு திரும்ப முடியாமல் தவிப்பதாக, பெயர் குறிப்பிட விரும்பாத அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
லெபனான் தலைநகர் பெய்ருட்டில் இஸ்ரேலியத் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி ஃபுவாட் ஷுக்குர் ஜூலை 30ஆம் தேதி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தும்பட்சத்தில் மத்திய கிழக்கில் விரிவான போர் ஏற்படும் என்று நம்பப்படுகிறது.
இதைத் தொடர்ந்து தற்பொழுது டெல்டா, யுனைடெட், லுஃப்தான்சா, ஏஜியன் ஏர்லைன்ஸ் போன்ற விமானச் சேவை நிறுவனங்கள் இஸ்ரேலுக்கான தங்கள் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
வெளிநாட்டில் இருக்கும் இஸ்ரேலியர்கள் இணைய ஆய்வில் பங்கேற்கும்படி அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இது மாற்று விமானப் பயணங்கள் உள்பட மற்ற ஏற்பாடுகள் செய்வதற்கு வகை செய்யும் என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.