ஜகார்த்தா: தற்போதைய இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ தலைமையிலான அமைச்சரவை ஆகஸ்ட் 19ஆம் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இந்தோனீசியாவில் அதிபர் தேர்தல் முடிவடைந்து அக்டோபரில் புதிய அரசாங்கம் பொறுப்பு ஏற்க விருக்கிறது.
இந்த நிலையில் முக்கிய அரசியல்வாதிகளின் நிலையை வலுப்படுத்தும் வகையில் அமைச்சரவை மாற்றம் இடம்பெற்றுள்ளது.
அதிபராக தேர்வு பெற்றுள்ள பிரபோவோ சுபியாந்தோவின் கெரிந்த்ரா கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியான சுப்ராட்மன் அண்டி அக்டாஸ், ஆளும் கட்சியைச் சேர்ந்த திரு யாசோன்னா லாவிலிக்குப் பதிலாக சட்ட, மனித உரிமை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கெரிந்த்ரா கட்சியின் உறுப்பினரான அங்கா ரக்கா பிரபோவோ, தொடர்பு, தகவல் துணை அமைச்சராக, தற்போதைய துணை அமைச்சரான நேசர் பேட்ரியாவுடன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் அதிபர் தேர்தலின்போது பிரபாவோவுக்காக தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டதால் இவர்கள் இருவருக்கும் முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் பல அமைச்சர்களின் இலாக்காக்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இந்தோனீசியாவின் அதிபராக திரு பிரபோவோவும் துணை அதிபராக திரு ஜிப்ரான் ரக்காபுமிங் ரக்காவும் அக்டோபர் 20ஆம் தேதியன்று பதவி ஏற்கவிருக்கின்றனர்.