கோலாலம்பூர்: மலேசியாவில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 15) மாலை 6 மணி நிலவரப்படி, கிட்டத்தட்ட 40 பகுதிகளில் காற்றுத்தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது.
சிலாங்கூரில் உள்ள ஜோஹான் செத்தியாவில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 189ஆகப் பதிவானது. இதுவே மலேசியா முழுவதும் பதிவான ஆக அதிக அளவாகும்.
பொதுவாக, காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 101 முதல் 200 வரை இருந்தால், அது ஆரோக்கியமற்ற நிலை எனக் கருதப்படுகிறது.
சிலாங்கூரில் ஷா ஆலம், பெட்டாலிங் ஜெயா, கிள்ளான் ஆகிய பகுதிகளிலும் காற்றுத்தரம் பாதிக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூரில் செராஸ், பத்து மூடா ஆகிய பகுதிகளிலும் ஆரோக்கியமற்ற காற்றுத்தரம் பதிவானது. நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நீலாய், சிரம்பான், போர்ட் டிக்சன் ஆகிய பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
ஜோகூரில் ஏழு பகுதிகளில் காற்றுத்தரம் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாகாங், பேராக், பினாங்கு, திரெங்கானு, மலாக்கா, கெடா, சரவாக் ஆகிய மாநிலங்களிலும் பல பகுதிகள் புகைமூட்டத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
வரும் நாள்களில் வட்டாரத்தின் பல பகுதிகளில் வறண்ட வானிலை நீடிக்கும் என்று ஆசியான் சிறப்பு வானிலை ஆய்வு நிலையம் முன்னுரைத்துள்ளது.
மழை பெய்யும் இடங்களில் புகைமூட்ட நிலவரம் மேம்படலாம்.
