ஹாங்காங்: ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையிலான ஹோர்முஸ் நீரிணை, ஈரானியத் தாக்குதல்களால் முற்றிலுமாக முடங்கிப்போனதால், மத்திய கிழக்கின் எண்ணெய், எரிவாயு வரத்து தடைப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை ஒரு வருடத்துக்கும் மேலாக காணாத அதிகபட்ச அளவை எட்டியுள்ளது.
உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய்யும் இயற்கை எரிவாயுவும் (LNG) இந்த வழியாகவே கடத்தப்படுகிறது.
இந்நிலையில் பெர்சிய வளைகுடா வழியாக எரிசக்தி விநியோகத்தை உறுதிப்படுத்தும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் திட்டத்தை உலக வணிகர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
இந்த வாரத்தின் முதல் மூன்று நாட்களில் 12% உயர்ந்த பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை, வியாழக்கிழமை (மார்ச் 5) ஒரு பீப்பாய் 84 டாலரை எட்டியுள்ளது. இதற்கிடையில், உலகின் 20% எரிவாயு விநியோகத்தை வழங்கும் கத்தார் தனது எரிவாயு வயல்களை மூடியதை அடுத்து, ஐரோப்பாவில் எரிவாயு விலை கிட்டத்தட்ட 50% அதிகரித்துள்ளது.
வணிகக் கப்பல்களுக்கு காப்பீட்டு ஆதரவு, கடற்படைப் பாதுகாப்பை அமெரிக்கா வழங்கும் என மார்ச் 3ஆம் தேதி டிரம்ப் உறுதியளித்தார்.
எனினும், ஹோர்முஸ் பகுதியில் தொடர்ச்சியான தாக்குதல்களால் கப்பல் போக்குவரத்து நிலைகுத்தியுள்ள நிலையில் சந்தையில் பதற்றம் நீடிக்கிறது.
உலகின் மிகப்பெரிய கப்பல் போக்குவரத்து சங்கமான BIMCO, ஹோர்முஸ் பகுதியில் உள்ள ஒவ்வொரு கப்பலையும் பாதுகாப்பது என்பது யதார்த்தத்தில் சாத்தியமற்றது என எச்சரித்துள்ளது.

