தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வர்த்தக உறவை வலுப்படுத்தும் ஐரோப்பா, தென்னமெரிக்கா

2 mins read
டிரம்ப் வரிவிதிப்பு அச்சுறுத்தல் எதிரொலி
34428adb-c7d0-44a8-a736-6d04743e66d7
ஐரோப்பிய நாடுகள், தென்னமெரிக்க நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் டிசம்பர் 6ஆம் தேதி உடன்பாடு எட்டப்பட்டது. பேச்சுவார்த்தையின் வெற்றியைக் கொண்டாடும் (இடமிருந்து) ஐரோப்பிய ஆணையத் தலைவர், அர்ஜெண்டினா, உருகுவே அதிபர்கள். - படம்: புளூம்பெர்க்

பிரசல்ஸ்: ஐரோப்பிய ஒன்றியம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 6ஆம் தேதி) நான்கு தென்னமெரிக்க நாடுகளுடன் வர்த்தக உடன்பாடு கண்டது.

இந்த உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தை நீண்டநாள்களாக இழுபறி நிலையில் இருந்தது. இந்நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு பெற்றுள்ள டோனல்ட் டிரம்ப் உலகின் சில பெரிய பொருளியல் நாடுகளுக்கு எதிராக வரி விதிக்கப்போவதாக அச்சுறுத்தியதால் இந்தப் பேச்சுவார்த்தை சூடுபிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெர்கசுர் என்ற பெயரில் அர்ஜெண்டினா, பிரேசில், பாராகுவே, உருகுவே ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இந்த வர்த்தகக் கூட்டமைப்பு உலகின் மிகப் பெரிய வர்த்தக மண்டலமாக உருவெடுத்துள்ளது.

அதனுடனான ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம் என்று கூறப்படுகிறது.

டிரம்ப் அமெரிக்க அதிபரானால் உலகப் பொருளியல் சிதறிவிடும் சாத்தியம் இருப்பதாக ஐரோப்பிய தலைவர்கள் எண்ணுகின்றனர். இந்நிலையில், இந்த ஒப்பந்தம் தடையற்ற வர்த்தகத்துக்கு கிடைத்த வெற்றி என்று பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் 700 மில்லியன் மக்கள் வாழும் சந்தையைத் திறந்துவிடும் என்று நம்பப்படுகிறது.

ஆனால், இந்த ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிளவை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

ஏனெனில், இதனால் மலிவான வேளாண் பொருள்கள் ஐரோப்பிய நாட்டுச் சந்தைகளை நிரப்பும் என்று கூறி, இந்த ஒப்பந்தத்திற்கு பிரான்ஸ் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த உடன்பாடு ஐரோப்பிய விவசாயிகளைப் பாதிக்கும் என்றும் அது எச்சரித்துள்ளது.

ஒப்பந்தத்தை எதிர்க்கும்படி பிரான்ஸ் விடுத்த அறைகூவலை பல நாடுகள் கண்டுகொள்ளவில்லை. எனினும், பிரான்ஸ் தனது எதிர்ப்பைத் தொடரப் போவதாக அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுள்ள போதிலும் ஒப்பந்தம் மறுஉறுதி செய்யப்பட வேண்டிய நாள் குறிப்பிடப்படவில்லை.

டோனல்ட் டிரம்பின் வெற்றியானது பல நாடுகளில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு உயர் வரிவிதிப்பு இருக்கும் என்ற அச்சத்தை எற்படுத்தியுள்ளது. உலக நாடுகளின் பொருள்களுக்கு எதிராக 10லிருந்து 29 விழுக்காடு வரையிலான வரியும், சீனாவிலிருந்து வரும் பொருள்களுக்கு 60 விழுக்காடு வரியும் விதிக்கப்போவதாக டிரம்ப் எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்