கோத்தா கினபாலு: மலேசியாவின் கிழக்கு மாநிலம் சாபாவில் கல்லூரி மாணவர்கள் பதின்மூவர், சக மாணவர் ஒருவரைக் கொலை செய்த குற்றம் நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
முகம்மது நஸ்மி அயிஸாட் முகம்மது நாருஸ் அஸ்வான் என்ற அந்த மாணவரைக் கொன்ற அந்தப் பதின்மூன்று மாணவர்களுக்கு ஆகஸ்ட் 28ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும்.
‘லஹாட் டாட்டு’ கைத்தொழில் கல்லூரியில் மார்ச் 21 மாலைக்கும் மார்ச் 22 காலைக்கும் இடையே முகம்மது நஸ்மி தாக்கப்பட்டார். 16 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட அந்த மாணவர்கள், நஸ்மியை அடித்து உதைத்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தாக்கப்பட்ட மாணவரின் மார்புப் பகுதியிலும் மென்மையான சதைப்பகுதிகளிலும் ஏற்பட்ட கடுமையான காயங்களால் நஸ்மி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
நஸ்மியைக் கொலை செய்ய அந்தப் பதின்மூவர் நினைக்கவில்லை என்று தற்காப்புத் தரப்பு முன்வைத்த வாதத்தை நீதிபதி நிராகரித்தார். மரணத்தை விளைவிக்கக்கூடிய அளவுக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளதை மருத்துவக் குறிப்புகள் காட்டுவதாக நீதிபதி சுட்டினார்.
அத்துடன், நீண்ட நேரமாக ஏறக்குறைய அரை நாளுக்கு, நடந்த இந்தத் தாக்குதல் திடீரென்று மூண்ட வன்செயலாக எடுத்துக்கொள்ள முடியாது என்றார் நீதிபதி.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய நீதிமன்ற விசாரணைக்காக மொத்தம் 18 சாட்சிகள் முன்னிலையானார்கள்.