போர்ட்லேண்ட்: அமெரிக்காவின் ஒரிகன் மாநிலத்தின் கிராமப்புறத்தில் ஐவரைக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் 36 வயது பெஞ்சமின் சார்ல்ஸ் பார்க்கர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 23) தெரிவித்தனர். அவர் தமது உயிரை மாய்த்துக்கொண்டிருக்கக்கூடும் என்று சந்தேகிகக்ப்படுகிறது.
ஒரிகனின் போர்ட்லேண்ட் நகருக்கு வெளியே ஏறத்தாழ 48 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஃபாரஸ்ட் குரோவ் கிராமப்புறச் சமூகத்தின் வீடு ஒன்றில் வாகனம் தீப்பற்றி எரிவதாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
அங்கு சென்று பார்த்தபோது, உயிரிழந்த ஐந்து பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அத்துடன், அந்த வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த குறிப்பிட்ட எண்ணிக்கையிலான செல்லப் பிராணிகளும் இறந்து கிடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


