தைப்பே: தைவானில் ஆறு முதல் 18 வயதுக்குட்பட்டோர் பயனடையும் வகையில் அரசாங்க மானியத்துடன்கூடிய முதலீட்டு கணக்குகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.
அந்நாட்டில் தொடர்ந்து குறைந்துவரும் பிறப்பு விகிதத்தைச் சீராக்கவும் குடும்பங்களுக்கான ஆதரவை விரிவுபடுத்தவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்கான அறிவிப்பை தைவான் அதிபர் லாய் சிங்-தே தலைமையிலான அரசு புதன்கிழமை (மே 27) வெளியிட்டது.
2024ஆம் ஆண்டில் தைவானின் கருவள விகிதம் 0.86ஆகப் பதிவானது. உலகளவிலும் அது ஆகக் குறைவானதாக இருந்தது.
இதற்குமுன் குறைந்த, நடுத்தர வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த இளையர்களுக்கு மட்டுமே அத்தகைய சேமிப்புத் திட்டத்தைப் பயன்படுத்திய நிலையில், தற்போது 18 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.
அத்திட்டத்தின்கீழ், 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு மாதந்தோறும் 5,000 தைவான் டாலர் ($203) உதவித்தொகை வழங்கப்படும்.
6 முதல் 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு, அந்தத் தொகையிலிருந்து 2,500 தைவான் டாலர் அவர்களின் சிறப்பு முதலீட்டுத் திட்டக் கணக்குகளில் செலுத்தப்படும்.
நிபுணத்துவம் பெற்ற தொழில்முனைவர்களால் நிர்வகிக்கப்படும் அக்கணக்குகளுக்கு, ஈராண்டுக் கால நிலையான வைப்புத்தொகை வட்டிக்கு நிகரான குறைந்தபட்ச வருவாய்க்குத் தைவான் அரசு உத்தரவாதம் அளிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
இது தைவானில் வேகமாக வளர்ந்துவரும் சொத்து நிர்வாகத் துறையை மேலும் ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

