தைப்பே: தைவான் காவல்துறையினர், உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகள் தொடர்பில் நடந்த சட்டவிரோத இணையப் பந்தயப் பிடிப்புக் கும்பலை முறியடித்துள்ளனர்.
அந்த நடவடிக்கையில் $388 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகை சூதாட்டக் கும்பலிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக அந்நாட்டுக் காவல்துறையினர் வியாழக்கிழமை (ஜூலை 2) தெரிவித்தனர்.
உலகக் கிண்ண ஆட்டங்களில் பங்கேற்க தைவான் தகுதிபெறவில்லை. இருப்பினும் தைவானிய மக்களில் பெரும்பாலானோர் மிகத் தீவிரக் காற்பந்து ரசிகர்கள் ஆவர்.
புதன்கிழமை (ஜூலை 1) தைவானிய காவல்துறையினர் தைனான் நகரில் ஒரு வீட்டில் சோதனை நடத்தினர்.
அதில் எண்மர் கைதானதுடன் அங்கு கணினிகள், கைப்பேசிகள், ரொக்கம் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டது.
ஹாங்காங்கிற்கும், மக்காவ் தீவுக்கும் கைதானோரில் ஐவர் பயணம் செய்துள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் சுற்றுலா விசாவில் அங்கு சென்று உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிக்கான சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என்று காவல்துறை குறிப்பிட்டது.
இதுவரை நடந்த உலகக் கிண்ணக் காற்பந்து ஆட்டங்கள் சார்ந்த பந்தயப் பிடிப்புக்கான சூதாட்டங்களில் குற்றக்கும்பல் $405 மில்லியன் வரை ஈட்டியதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

