தைவானிய கப்பல்துறை நிறுவனங்கள் அவற்றின் ஊழியர்களுக்கு அரையாண்டு போனசை வாரி வழங்குகின்றன. கப்பல்துறைக்கு வசந்தகாலம் தொடர்வதே இதற்குக் காரணம்.
‘யாங் மிங் மரின் டிரான்ஸ்போர்ட்’ நிறுவனம் அடுத்த சம்பள நாளில் அதன் ஊழியர்களுக்கு 30 மாத போனஸ் வரை வழங்குவதாக எகனாமிக் டெய்லி நியூஸ் அதன் அறிக்கையில் வியாழக்கிழமை (ஜூன் 1) குறிப்பிட்டது. NT$2.3 பில்லியன் (S$101 மில்லியன்) போனசுக்கு பங்குதாரர்கள் கடந்த வாரம் ஒப்புதல் அளித்திருந்தனர்.
ஏற்கெனவே அந்நிறுவனம் இந்த ஆண்டு தொடக்கத்தில் 12 மாத ஆண்டிறுதி போனசை வழங்கியிருந்தது.
‘எவர்கிரீன் மரின்’ நிறுவனம் அதன் 3,100 ஊழியர்களுக்கு NT$1.9 பில்லியன் மதிப்பிலான போனசை வழங்கவிருக்கிறது. இது ஊழியர்களின் ஏறக்குறைய 12 மாதச் சம்பளத்துக்குச் சமம்.
அந்நிறுவனம் ஏற்கெனவே ஜனவரியில் ஏறத்தாழ 50 மாதச் சம்பளத்தை அதன் ஊழியர்களுக்கு போனசாக வழங்கியிருந்தது. கடந்த ஆண்டு அந்நிறுவனம் சாதனை அளவாக NT$334.2 பில்லியன் லாபம் ஈட்டியது.
கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக கடந்த ஈராண்டுகளாக கப்பல் நிறுவனங்கள் பக்கம் காற்று வீசியது. பயனீட்டாளர் பொருள்களுக்கான தேவை கணிசமாக அதிகரித்ததே இதற்குக் காரணம்.
ஆனால், பொருளியல் நிச்சயமற்ற சூழல் நிலவுவதால் உலகளவில் கப்பல்துறையில் வர்த்தகம் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.