டாக்கா: தேசியவாதக் கட்சியின் (பிஎன்பி) தலைவர் தாரிக் ரஹ்மான், பங்ளாதேஷின் பிரதமராகச் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 17) பதவியேற்றார்.
பங்ளாதேஷ் அதிபர் முகம்மது ஷகாபுதின் முன்னிலையில், திரு தாரிக் பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
பங்ளாதேஷில் கடந்த 12ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 297 இடங்களில் 209 இடங்களைத் தேசியவாதக் கட்சி கைப்பற்றியது.
மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிக இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, அதன் தலைவரான 60 வயது தாரிக் ரஹ்மான் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் பிரதமராகப் பதவியேற்றார்.
பங்ளாதேஷ் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் திரு தாரிக்குடன் 25 அமைச்சர்களும் 24 துணை அமைச்சர்களும் பதவியேற்றனர்.

