ஹாங்காங்கில் ஏற்பட்ட 6 மீட்டர் ஆழமான குழி ஒன்றில் டாக்சி விழுந்தது. இச்சம்பவம் செப்டம்பர் 29ஆம் தேதி அதிகாலையில் நேர்ந்தது.
சேதமடைந்த குழாயிலிருந்து வெளியேறிய தண்ணீர் ஆழ்குழியை நிரப்பியது. அந்த டாக்சி முழுமையாகத் தண்ணீரில் மூழ்கியது.
இருப்பினும், நல்லவேளையாக டாக்சி ஓட்டுநராலும் அதிலிருந்த பயணியாலும் தப்பிக்க முடிந்தது.
அந்த டாக்சி, நள்ளிரவுக்குப் பிறகு ஞாயிறு காலை லாய் சி கொக் சாலைவழியாக சென்றுகொண்டிருந்தது.
தண்ணீர்க் குழாய் ஒன்று சாலைக்கு அடியில் வெடித்ததாக ‘த ஸ்டாண்டர்ட்’ செய்தி நிறுவனம் தெரிவித்தது. பழுப்பு நிற, சேறு கலந்த தண்ணீர் சாலை முழுவதும் வழிந்தோடியதைக் காண முடிந்தது.
‘சியூ’ என்ற அந்த ஓட்டுநர் வெள்ளம் நிறைந்த சாலையைக் கண்டார். அவர் சாலைத் தடம் மாற முயற்சி செய்தார். இருப்பினும், அவ்வாறு செய்தபோது, அந்தத் தடத்தில் ஏற்கெனவே பேருந்து ஒன்று விரைவாக வந்துகொண்டிருந்தது.
அதன் காரணமாக மெதுவாகச் சென்று டாக்சியை நிறுத்த முடிவுசெய்தார் சியூ. இருப்பினும், அந்தத் தருணத்தில் உரக்கச் சத்தத்தைக் கேட்டதாகவும், தமது வாகனம் இடது பக்கம் சரிந்ததாகவும் அவர் கூறினார்.
அவர் தண்ணீரிலிருந்து வெளியேறும் நோக்கில் டாக்சியை ஓட்ட முயற்சி செய்தார். இருப்பினும், டாக்சிக்குள் நீர் புகுந்துவிட்டது.
தொடர்புடைய செய்திகள்
அதனால், சியூவும் அவரது பயணியும் டாக்சியைவிட்டு வெளியேற முடிவுசெய்தனர்.