மஹாராஷ்டிரா: ஐந்தாம் வகுப்பு கணக்குப் பாடத்தில் உள்ள கேள்விக்கு விடை தெரியாத பத்து வயது மாணவியை அவரின் ஆசிரியர் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
மஹாராஷ்டிராவில் உள்ள நாக்பூரில் உள்ள சில்லா பரிஷத் தொடக்கப்பள்ளியில் இந்தச் சம்பவம் கடந்த திங்கட்கிழமை (மார்ச் 10) நடந்துள்ளது.
இடது கையில் பலத்த காயத்துடன் வீடு திரும்பிய மகளைக் கண்ட பெற்றோர் எப்படி கையில் கடுமையான காயம் ஏற்பட்டது என்று கேட்டபோது கணக்குப் பாடக் கேள்விக்கு சரியான பதில் தெரியவில்லை என்ற காரணத்தை மகள் அளித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
கணக்குக் கேள்விக்குத் தவறான விடையளித்த மாணவிமீது கோபம் கொண்ட ஆசிரியர் அவளைத் தாக்கியுள்ளார். மேலும் அவளது பெற்றோரை பள்ளிக்கு அழைத்துச் சம்பவம் பற்றி வெளியில் தெரியப்படுத்தினால் மாணவியைப் பள்ளியை விட்டு வெளியேற்றிவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
விவரங்களை அறிந்துகொண்ட குழந்தைகள் உதவிக் குழு, மாணவியின் இல்லத்தில் விசாரணை நடத்தி, காவல்நிலையத்தில் ஆசிரியருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை (FIR) பதிவுசெய்துள்ளது.

