ஐக்கிய நாடுகள் சபை; அமெரிக்கா: ஐக்கிய நாடுகள் சபையை (ஐநா) வழிநடத்தப் போட்டியிடும் ஆறு வேட்பாளர்களும், வியாழக்கிழமை (ஜூலை 23) நடைபெற்ற தொலைக்காட்சி விவாதம் ஒன்றின்போது, நெருக்கடியில் இருக்கும் அந்த அமைப்பின் நம்பிக்கையை மீட்டெடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளனர்.
வேட்பாளர்களுக்கான தெரிவுமுறை அதிகாரபூர்வமாக ஒரு வாரத்தில் தொடங்கும்.
முன்னணியில் இருக்கும் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதில் தேர்தல் பிரசாரம் போதிய ஆர்வத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மிகப்பெரிய பொதுச் சபை மண்டபத்தில் நடைபெற்ற அந்த நிகழ்வில் அரசதந்திரிகள், ஐநா ஊழியர்கள், பொதுச் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோரின் கேள்விகளுக்கு வேட்பாளர்கள் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பதிலளித்தனர்.
‘புளூம்பெர்க்’ நிறுவனம் அந்த நிகழ்வை ஒளிபரப்பியது.
ஐநாவின் தற்போதைய தலைமைச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் டிசம்பர் 31ஆம் தேதி பதவி விலகவிருக்கிறார்.
அந்தப் பொறுப்பைத் தொடர்வதற்கான போட்டியில் சிலியின் மிஷெல் பாச்சலெட், எக்குவடோரின் மரியா பெர்னாண்டா எஸ்பினோசா, அர்ஜென்டினாவின் ரஃபேல் குரோசி, கோஸ்டா ரிக்காவின் ரெபெக்கா கிரின்ஸ்பான், குயானாவின் கரோலின் ரோட்ரிகஸ்-பிர்கெட், செனகலின் மெக்கி சால் ஆகிய ஆறு பேரும் களம் இறங்கியுள்ளனர்.
ஒவ்வொரு வேட்பாளரும் தாங்கள் ஆகச் சிறந்த தலைமைச் செயலாளராக இருப்பதற்கான காரணங்களை முன்வைத்தனர்.
உலகளவில் பூசல்கள் நடந்துவரும் மிகக் கடினமான காலகட்டத்தை எதிர்கொள்வதற்கான தங்களது பலங்களையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
தேசிய அல்லது அனைத்துலக அளவிலான தங்களது அனுபவங்களை அவர்கள் குறிப்பிட்டுக் காட்டியதோடு, அனைத்துத் தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தும் தங்களது திறனையும் அவர்கள் வலியுறுத்தினர். 193 ஐநா உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு ஒவ்வொரு வேட்பாளரும் பதிலளித்துள்ளனர்.
பெரும்பாலான வேட்பாளர்கள் ஐக்கிய நாடுகள் சபை மேலும் திறம்படச் செயல்பட, அமைப்பில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் சீர்திருத்தங்களைத் தொடரவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
அதோடு, உலகளவில் மேற்கொள்ளப்படும் அமைதி முயற்சிகளில் தலைமைச் செயலாளர் அதிக அளவில் ஈடுபடவேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் கோடிக்காட்டினர்.
இந்நிலையில், தங்களின் விருப்பத் தெரிவுகளைத் தீர்மானிக்க, பாதுகாப்பு மன்றத்தின் 15 உறுப்பினர்களும் வியாழக்கிழமை (ஜூலை 30) தங்களின் முதலாவது ரகசிய வாக்குப்பதிவை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


