விமானம் தரையிறங்குவதற்குமுன் பயணிகளின் இருக்கை மேசையில் இருந்து உணவுத்தட்டுகள் அகற்றப்படாததற்கு விமான சிப்பந்திகள் அனைவரையும் பணியிடை நீக்கம் செய்துள்ளது தாய் ஏர்வேஸ்.
சம்பவம் கடந்த வெள்ளிகிழமை சிங்கப்பூரிலிருந்து பேங்காக் சென்ற விமானத்தில் நடந்தது.
அது குறித்து டிக்டாக் தளத்தில் ஒரு காணொளியும் வெளியானது.
காணொளியில் மூன்று பயணிகளின் இருக்கை மேசையில் உணவுத்தட்டுகள் இருந்தன. விமானம் தரையிறங்கியபோது உணவுத்தட்டில் இருந்த ஒரு தண்ணீர் போத்தல் கீழே விழுந்தது.
அதைத்தொடர்ந்து தாய் ஏர்வேஸ் விசாரணையைத் தொடங்கியது.
விசாரணையின் முடிவில் அந்த விமானத்தில் இருந்த சிப்பந்திகள் அனைவரும் ஒரு மாதம் ஊதியம் இல்லாமல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தாய் ஏர்வேஸ் தெரிவித்தது.
பயணிகளின் பாதுகாப்பில் தாய் ஏர்வேஸ் கவனமாக இருக்கும் என்றும் சிப்பந்திகளுக்கு கூடுதல் பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் தாய் ஏர்வேஸ் நிர்வாகி தெரிவித்தார்.

