பேங்காக்: தாய்லாந்து செய்தி நிறுவன ஊழியர் ஒருவர் பணியிலிருந்தபோதே மாண்டதை அடுத்து, அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளது.
சரவட் ஸ்ரீசாவட் என்ற அந்த 44 வயது ஆடவர், ‘தாய் நியூஸ் நெட்வொர்க் (டிஎன்என்)’ செய்தி நிறுவனத்தில் மூத்த மேலாளராக வேலைசெய்து வந்தார்.
மாற்றாள் இல்லாததால் வாரத்தில் ஏழுநாளும் சரவட் மிகைநேரப் பணி (OT) செய்துவந்ததாகக் கூறப்பட்டது. இரண்டுநாள் மருத்துவ விடுப்பில் இருந்தபோதும் பணியை முடித்துக்கொடுப்பதற்காக அவர் மீண்டும் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டதாக ‘தி நேஷன் தாய்லாந்து’ செய்தி தெரிவிக்கிறது.
அவருக்கு நீரிழிவு, இரத்தக் கொதிப்புப் பிரச்சினைகள் இருந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை அலுவலகத்தில் பணியிலிருந்தபோதே மயங்கி விழுந்து உயிரிழந்தார். மாரடைப்பால் அவர் மாண்டுபோனது பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து, சரவட்டின் மரணத்தில் சந்தேகமிருப்பதாகக் கூறி, அதுகுறித்து விசாரணை நடத்த தாய்லாந்து தொழிலாளர்துறை அமைச்சர் சுச்சார்ட் சொம்கிளின் உத்தரவிட்டுள்ளார்.
தாய்லாந்துச் சட்டப்படி, பணியாளர்களின் வேலை நேரம் வாரத்திற்கு 48 மணி நேரத்திற்கு மிகக்கூடாது. மிகைநேரம் பணியாற்றுவதாக இருந்தால், அது 36 மணி நேரத்திற்குமேல் இருக்கக்கூடாது.
இந்நிலையில், சரவட்டிற்குக் குறைந்தது வாரம் ஒரு நாளேனும் விடுப்பு கொடுக்கப்பட்டதா என்று தொழிலாளர் பாதுகாப்புத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
சரவட்டின் மரணத்தை அடுத்து, அவரது குடும்பத்திற்குக் கிடைக்க வேண்டிய எல்லா அனுகூலங்களையும் உறுதிசெய்யும்படி அமைச்சர் சுச்சார்ட் உத்தரவிட்டு இருக்கிறார்.
வேலை காரணமாக சரவட் இறந்தது உறுதிப்படுத்தப்பட்டால் அவரது இறுதிச் சடங்கிற்காக 50,000 பாட் (S$1,977), அடுத்த பத்தாண்டுகளுக்கு மாதந்தோறும் அவரது மாதச் சம்பளத்தில் 70 விழுக்காடு, ஓய்வூதியத் தொகை ஆகியவற்றைப் பெற அவரது குடும்பம் தகுதிபெறும்.