பேங்காக்: காங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டாவிலிருந்து வருவோர் அவற்றின் வழியாகத் தங்கள் நாட்டுக்கு வருவோர் கட்டாயமாக 21 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்படவேண்டும் என்று தாய்லாந்து உத்தரவிட்டுள்ளது.
காங்கோவிலும் உகாண்டாவிலும் இபோலா கிருமிப் பரவல் மோசமாக இருந்துவரும் நிலையில் தாய்லாந்து செவ்வாய்க்கிழமை (மே 26) இந்த உத்தரவை பிறப்பித்தது.
காங்கோவின் கிழக்குப் பகுதியில் இபோலா கிருமிப் பரவல் தொடங்கியது. அந்த இபோலா பரவலை உலகச் சுகாதார நிறுவனம், அனைத்துலக அளவில் கவலை தரும் சுகாதார அச்சுறுத்தலாக வகைப்படுத்தியது.
காங்கோவில் இபோலா கிருமிப் பரவல் இருப்பதாக இம்மாதம் 15ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதிலிருந்து 204 பேர் அதற்குப் பலியாகிவிட்டனர், 867 பேர் கிருமித்தொற்றுக்கு ஆளாகியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. காங்கோவின் சுகாதார அமைச்சு கடந்த வார இறுதியில் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் இத்தகவல்கள் இடம்பெற்றன.
அண்டை நாடான உகாண்டாவில் ஒருவர் இபோலா தொற்றுக்குப் பலியாகிவிட்டார். அந்நாட்டில் மேலும் அறுவருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இபோலா தொற்றுக்கு ஆளான அறிகுறிகள் இருப்போர், இல்லாதோர் அனைவரும் குறைந்தது 21 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்படவேண்டும் என்று தாய்லாந்தின் சுகாதார அமைச்சு செவ்வாய்க்கிழமை அறிக்கை மூலம் தெரிவித்தது.

