துபாய்: ஈரான், தன்மீது விதிக்கப்படும் தடைகளைத் தாண்டி வெற்றியுடன் மீண்டெழும் என்று அந்நாட்டு அதிபர் மசூத் பெசெஷ்கியன் கூறியுள்ளார்.
ஐக்கிய நாட்டு நிறுவனப் பாதுகாப்பு மன்றம் ஈரான்மீதான தடை உத்தரவுகளை நிரந்தரமாக நீக்கப்போவதில்லை என்று வாக்களித்ததை அடுத்து அவர் அவ்வாறு கூறினார்.
“மீண்டும் தடைகளை விதித்து அவர்கள் பாதையை மறித்தாலும் அதை உருவாக்கியது ஒரு மனித மூளையில் உதித்த யோசனைகள்,” என்று திரு பெசெக்ஷியன் தொலைகாட்சியில் உரையாற்றினார். “அவர்களால் நம்மைத் தடுத்து நிறுத்த முடியாது,” என்றார் அவர்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஜூன் மாதத்தில் நாட்டான்ஸ் என்று ஈரானில் உள்ள அணுவாயுதக் கட்டமைப்புகளை அழித்தன. ஆனால் அதை உருவாக்கிய மனிதர்கள் என்றும் அதை அவர்கள் திரும்ப உருவாக்க முடியும் என்றும் திரு பெசெக்ஷியன் குறிப்பிட்டார்.
பிரிட்டன், ஃபிரான்ஸ், ஜெர்மனி ஆகியவை ஈரான்மீது மீண்டும் தடைகளைப் பிறப்பிக்க 30 நாள் நடைமுறையைக் கடந்த மாதம் அறிவித்ததை அடுத்து ஐக்கிய நாட்டு நிறுவனமும் தடைகளை விதிக்க வாக்களித்தது.
அணுவாயுதத் தயாரிப்பில் ஈடுபடமாட்டோம் என்று 2015ஆம் ஆண்டு உலக வல்லரசுகளுடன் செய்துகொண்ட உடன்பாட்டை ஈரான் மீறியதாக பிரிட்டன், ஃபிரான்ஸ், ஜெர்மனி ஆகியவை குறைகூறின. ஈரான் அந்தக் கூற்றை நிராகரித்தது.
“சூழ்நிலையை மாற்றுவதற்கான அதிகாரிகள் எங்கள் வசம் இருப்பதால் அளவுக்கதிகமாகப் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளுக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம்,” என்று திரு பெசெக்ஷியன் சொன்னார்.
ஈரானுக்கும் முக்கிய ஐரோப்பிய வல்லரசுகளுக்கும் இடையே ஒரு வாரத்துக்குள் உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தடை உத்தரவுகள் மீண்டும் ஈரான்மீது விதிக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தடைகள் மீண்டும் நடப்புக்கு வந்தால் அனைத்துலக அணுசக்தி அமைப்புடனான ஒத்துழைப்பு உடனடியாக நிறுத்தப்படும் என்று ஈரானின் தேசியப் பாதுகாப்பு மன்றம் எச்சரித்தது.
இம்மாதத் தொடக்கத்தில், அமெரிக்காவும் இஸ்ரேலும் வெடிகுண்டு போட்ட இடம் உள்ளிட்ட அணுவாயுத உற்பத்தி இடங்களை நேரில் சென்று சோதிப்பதற்கான உடன்பாட்டை ஈரானும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அணுவாயுதக் கண்காணிப்பு அமைப்பும் இணக்கம் கண்டதாகக் கூறின.