ஒரே வாரத்தில் பாலி கடற்கரையில் மாண்டு ஒதுங்கிய மூன்றாவது திமிங்கிலம்

ஒரே வாரத்தில் பாலி கடற்கரையில் மாண்டு ஒதுங்கிய மூன்றாவது திமிங்கிலம்

1 mins read
b0568854-fc4f-4172-a3f5-fc82e1f8d6e7
படம்: ஏஎஃப்பி -
Google News Preferred Icon

இந்தோனீசியாவின் பாலித்தீவு கடற்கரைப் பகுதியில் மீண்டும் ஒரு திமிங்கிலம் மாண்டு கரைஒதுங்கியுள்ளது.

கிட்டத்தட்ட 17 மீட்டர் நீளம் கொண்ட அந்தத் திமிங்கிலம் பாலியின் ஜெம்பிரானாவில் உள்ள 'யெ லே' கடற்கரையில் சனிக்கிழமை (ஏப்ரல் 8) பிற்பகல் கரை ஒதுங்கியதாக அதிகாரிகள் கூறினர்.

கடந்த ஒருவாரத்தில் மட்டும் பாலியில் மாண்டு கரை ஒதுங்கிய மூன்றாவது பெரிய வகை திமிங்கிலம் இது.

மருத்துவச் சோதனைகள் நடத்திய பிறகு திமிங்கிலத்தை புதைக்கவுள்ளதாகப் அதிகாரிகள் தெரிவித்தனர்.

திமிங்கிலத்தின் உறுப்புகளை மக்கள் திருடிவிடக்கூடாது என்பதற்காகக் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 5) பாலியின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் 18 மீட்டர் நீளம் கொண்ட திமிங்கிலம் கரை ஒதுங்கியது.

ஏப்ரல் 1ஆம் தேதி இரண்டு டன் எடைக்கு மேலும் 11 மீட்டர் நீளமும் கொண்ட திமிங்கிலம் மாண்டு கரை ஒதுங்கியது.

மாண்ட இரண்டு திமிங்கிலமும் உடல்நலக்குறைவால் இறந்திருக்கலாம் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் பாலித்தீவில் தொடர்ந்து திமிங்கிலம் மாண்டு கரை ஒதுங்குவது அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.