காத்மாண்டு: இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் முன்பை விட வேகமாக உருகி வருவதால், அவை ஓர் ஆபத்தான உச்சக்கட்ட நிலையை எட்டி வருவதாகவும் லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் ஆபத்தில் உள்ளது என்றும் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
அதனால், இந்த நூற்றாண்டின் நடுப்பகுதிக்குள் அந்தப் பகுதி நீர்ப் பாதுகாப்பில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று இந்த மாதம் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேப்பாள-திபெத் எல்லைப் பகுதியில் ஆகஸ்ட் மாதப் பிற்பகுதியில் இமயமலை பனிப்பாறை ஒன்று சரிந்து விழுந்ததைத் தொடர்ந்து ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அந்தப் பனிப்பாறைச் சரிவு, கீழே உள்ள பள்ளத்தாக்குகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகளையும் திடீர் வெள்ளப்பெருக்கையும் ஏற்படுத்தியது.
அதன் காரணமாக நேப்பாளம் மற்றும் சீனாவின் திபெத் பகுதி முழுவதும் குறைந்தது 1,300 பேர் உயிரிழந்தனர் என்றும் 5,300க்கும் மேற்பட்டோர் காணாமல் போய்விட்டனர் என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பனிப்பாறைகள் உருகிச் சுருங்கும்போது, மில்லியன்கணக்கான மக்கள் வாழும் பள்ளத்தாக்குகளுக்கு மேலே, தளர்வான பாறைகள் மற்றும் நிலையற்ற பனிப்பாறைகளை அவை விட்டுச் செல்கின்றன என்று அந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
ஆய்வை ‘சிஸ்டமிக்’ என்ற ஆலோசனை நிறுவனம், ஒருங்கிணைந்த மலைக் குழு, ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டுக்கான அனைத்துலக மையம், இந்தியாவின் ‘ஜி.பி. பண்ட் தேசிய இமயமலை சுற்றுச்சூழல் நிறுவனம்’ ஆகியவற்றோடு இணைந்து தயாரித்துள்ளது.

