கோத்தா கினபாலு: மலேசியாவின் கோத்தா கினபாலுவிற்கு அருகே மூன்று கிராமங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று குழந்தைகள் உயிரிழந்தன.
இந்த விபத்தில் நூற்றுக்கணக்கான மர வீடுகளும் நிரந்தரக் குடிசை வீடுகளும் நாசமடைந்தன.
விபத்தில் உயிரிழந்த குழந்தைகள் நானா அப்துல்லா, 4, முகமட் அஸ்ருல் அப்துல்லா, 6, நுர்ஃபராடிலா முகமட் தாஜிஹா, 8, என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சாபா தீயணைப்பு, மீட்புத் துறை அறிக்கை வாயிலாகத் தெரிவித்தது.
அதிகாலை 1.40 மணியளவில் தீயணைப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்து, அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது அப்பகுதி முழுவதும் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது.
தீப் பிழம்பு உயரமாகவும் வேகமாகப் பரவும் வகையிலும் இருந்ததால், மேலும் பரவாமல் தடுக்க தீயணைப்பு வீரர்கள் நான்கு வீடுகளை இடித்துத் தள்ள வேண்டியிருந்தது.
“விபத்தில் சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை, பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம் குறித்து சரிபார்க்கப்பட்டு வருகிறது. தகவல்கள் அவ்வப்போது வழங்கப்படும்,” என்று அது கூறியது.
தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தி, அருகில் உள்ள பகுதிகளுக்குப் பரவாமல் தடுத்தனர்.
அதேவேளையில், சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தீயணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கோத்தா கினபாலு, லின்டாஸ், பெனாம்பாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களைச் சேர்ந்த மொத்தம் 39 வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்று பெர்னாமா தகவல் வெளியிட்டுள்ளது.


