ரஷ்யா-உக்ரேன் இடையே மூன்று நாள் போர்நிறுத்தம்

ரஷ்யா-உக்ரேன் இடையே மூன்று நாள் போர்நிறுத்தம்

1 mins read
மேலும் நீட்டிக்கப்படும் என டோனல்ட் டிரம்ப் நம்பிக்கை
5d68791b-a381-415b-b466-6a54c0f35f5a
மாஸ்கோ செஞ்சதுக்கத்தில் ஆண்டுதோறும் மே 9ஆம் தேதி நடக்கும் வெற்றிப் பேரணியை உக்ரேன் சீர்குலைக்க முயன்றால் அந்நாட்டின்மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷ்யா எச்சரித்திருந்தது. - படம்: இபிஏ
multi-img1 of 3

மாஸ்கோ: ரஷ்யாவும் உக்ரேனும் மே 9 முதல் 11 வரை மூன்று நாள்களுக்குச் சண்டையை நிறுத்திக்கொள்ள உடன்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்தத் தற்காலிகப் போர்நிறுத்தம் மேலும் நீட்டிக்கப்படும் என நம்புவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா-உக்ரேன் இடையே நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகச் சண்டை நடந்துவரும் நிலையில், இருதரப்பும் 1,000 போர்க்கைதிகளை விடுதலை செய்யும் என்றும் திரு டிரம்ப், தமது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சண்டை நிறுத்த உடன்பாட்டை மீறிவிட்டதாக இரு நாடுகளும் குற்றஞ்சாட்டி வருகின்றன.

ரஷ்யா-உக்ரேன் போரை முடிவிற்குக் கொண்டுவருவதில் முன்னேற்றம் ஏற்படாததால் அதிபர் டிரம்ப் பெரிதும் குறைப்பட்டுக்கொண்டார். இந்நிலையில், இந்த மூன்று நாள் தற்காலிகப் போர்நிறுத்தம் அவருக்குச் சற்று நிம்மதி அளித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

“தற்காலிகமாகப் போரை நிறுத்தும்படி நான் கேட்டுக்கொண்டேன். அதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் உக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியும் ஒத்துக்கொண்டனர். நீண்ட, கடுமையான, அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய போரின் முடிவிற்கான தொடக்கமாக இது அமையும் என நம்புகிறேன்,” என்று திரு டிரம்ப் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

போர்நிறுத்தத்தை டெலிகிராம் சமூக ஊடகம் வழியாக உக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி உறுதிப்படுத்தினார்.

முன்னதாக, மாஸ்கோ செஞ்சதுக்கத்தில் ஆண்டுதோறும் மே 9ஆம் தேதி நடக்கும் வெற்றிப் பேரணியை உக்ரேன் சீர்குலைக்க முயன்றால் அந்நாட்டின் தலைநகர் கியவ்மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷ்யா எச்சரித்திருந்தது.

குறிப்புச் சொற்கள்