கோம்பாக்: கொள்ளையர்கள் எனச் சந்தேகிக்கப்பட்ட மூவரை மலேசியக் காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.
மலாக்கா, நெகிரி செம்பிலான், சிலாங்கூர், கோலாலம்பூர், பாகாங், பினாங்கு ஆகிய இடங்களில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவங்களுடன் அவர்களுக்குத் தொடர்பிருந்ததாகக் கூறப்பட்டது.
சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஹுசைன் ஒமர் கான் சனிக்கிழமை (டிசம்பர் 23) கோம்பாக்கில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் இதனைத் தெரிவித்தார்.
செலாயாங்கில் வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குச் சற்றுமுன் அந்த ரோஹிங்யா சந்தேகப் பேர்வழிகளுக்கும் காவல்துறைக்கும் இடையே துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாகக் கூறப்பட்டது.
சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, அவர்கள் வந்த காரைக் காவல்துறை தடுத்து நிறுத்தியது.
“காரை நிறுத்தும்படி காவலர்கள் அறிவுறுத்தினர். ஆயினும், அதன் ஓட்டுநர் முதலில் ஒத்துழைக்க மறுத்தார். பின்னர் காவலர்கள் அக்காரைச் சோதனையிட்டபோது, காரினுள் இருந்தவர்கள் அவர்களை நோக்கிச் சுட்டனர்,” என்று திரு ஹுசைன் தெரிவித்தார்.
அந்தச் சந்தேகப் பேர்வழிகளைச் சுட்டுக்கொன்றபின் அக்காரைச் சோதனையிட்டபோது அதில் இரு கைத்துப்பாக்கிகளும் ஓர் அரிவாளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
முப்பது வயதை ஒட்டிய அவர்களில் இருவரிடம் அகதிகளுக்கான ஐநா அடையாள அட்டைகள் இருந்தன.
இன்னொருவர் ரோஹிங்யா குழுவைச் சேர்ந்தவர் என்றும் கடந்த 2011ஆம் ஆண்டு முதலே பூட்டை உடைத்து வீடு புகுந்து திருடுவதையும் கொள்ளையடிப்பதிலும் ஈடுபட்டு வந்தார் என்று திரு ஹுசைன் சொன்னார்.