ஜோகூர் பாரு: டிசம்பர் முற்பாதியில் ஜோகூர் பாருவில் ஏழு வயது சிங்கப்பூர் சிறுவனைக் கடத்தியதாக பதின்மவயதினர் மூவர்மீது நடுவர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
புதன்கிழமை நீதிபதி ஆர்.சாலினி முன்னிலையில் அந்த மூவரிடம் மாண்டரின் மொழியில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
குற்றஞ்சாட்டப்பட்டவர்களான ஜோனத்தன் யெட், 18, என்பவரும் வயது குறைந்த இருவரும் (வயது 16, 17) குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்தனர்.
சட்டபூர்வ காப்பாளரிடம் இருந்து அந்த மூவரும் அச்சிறுவனைக் கடத்தியதாகக் குற்றபத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. டிசம்பர் 12ஆம் தேதி மாலை 5.15 மணிக்கு ஜாலான் செரம்பாங்கில் குற்றம் புரியப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அரசு தரப்பு வழக்கறிஞர் சமீரா முகம்மது லுத்ஃபி இஸ்மாயில் அந்த மூவருக்கு எதிராக வழக்கு தொடுத்தார். குற்றஞ்சாட்டப்பட்டவர்களை வழக்கறிஞர் எவரும் பிரதிநிதிக்கவில்லை.
குற்றஞ்சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் பிணையாளி ஒருவரை நியமித்து, பிணைத் தொகையை 8,000 ரிங்கிட்டாக (S$2,300) நிர்ணயிக்கும்படி வழக்கறிஞர் சமீரா கேட்டுக்கொண்டார்.
தங்களது தண்டனைக் குறைப்பு வாதத்தில் அந்த மூவரும் பிணைத் தொகையைக் குறைக்கும்படி கோரினர்.
பின்னர் அவர்கள் ஒவ்வொருவருக்கும் பிணையாளி ஒருவருடன் பிணைத் தொகையை 2,500 ரிங்கிட்டாக நீதிமன்றம் நிர்ணயித்தது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் வயது குறைந்த அந்த இருவருக்கு அவர்களுடைய பெற்றோர் பிணையாளிகளாக நியமிக்கப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
ஜனவரி 23ஆம் தேதி வழக்கு விசாரணை தொடரும் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

