தோக்கியோ: ஜப்பானின் பிரபல சுற்றுப்பயண இடமான ‘தோக்கியோ ஸ்கைட்ரீ’ கோபுரத்தில் உள்ள மின்தூக்கி ஒன்றில் கோளாறு ஏற்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 22) இரவு அச்சம்பவம் நிகழ்ந்தது.
நிலத்துக்குமேல் 30 மீட்டர் உயரத்தில் செயலிழந்த மின்தூக்கியில் 20 பேர் சிக்கியதாக காவல்துறை கூறியது.
ஐந்தரை மணி நேரம் மின்தூக்கியில் சிக்கிய பிறகு, இரண்டு பிள்ளைகள் உட்பட 20 ஆண்களும் பெண்களும் காயங்களின்றி மீட்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
அந்தக் கோளாற்றால், மொத்தம் 1,200 பேர் தற்காலிகமாக, நிலத்துக்குமேல் 450 மீட்டர் உயரத்தில் இருக்கும் ‘டெம்போ டெக்’, ‘டெம்போ கேலரியா’ ஆகிய பார்வையாளர் தளங்களில் சிக்கினர்.
அந்தக் கோபுரம் பாதுகாப்புச் சோதனைக்காகத் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என்று தோக்கியோ ஸ்கைட்ரீயை இயக்கும் செயல்பாட்டு நிறுவனம் கூறியது. முன்கூட்டியே நுழைவுச் சீட்டுகள் வாங்கியோருக்குப் பணம் திரும்பக் கொடுக்கப்படும் என்றும் அது தெரிவித்தது.

