டென்பசார்: பாலி கடற்கரைகளில் குப்பைகளை அகற்றும் பணி பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டது.
அங்கு அதிகரித்து வரும் கழிவு பிரச்சினை குறித்த இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவின் அண்மைய விமர்சனத்தைத் தொடர்ந்து தீவைச் சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளது.
காவல்துறை, உள்ளூர் ராணுவத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பணியாளர்கள், மாணவர்கள், தொண்டூழியர்கள் என ஏராளமானோர் பிப்ரவரி 3ஆம் தேதி தீவின் இரு பிரபலமான கடற்கரைகளில் குப்பைகளை அகற்றினர்.
டெலோட் பெராவா, சாபா கடற்கரை ஆகியவற்றிலும் கூடுதல் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கடற்கரைகளிலிருந்து டன் கணக்கில் கழிவுகள் அகற்றப்பட்டன.
தீவின் கடல் சார்ந்த சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாப்பதில் சமூக ஈடுபாடு முக்கியமானது என்பதால் கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் திட்டத்தில் சேர அதிகாரிகள் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்ததாக பாலி காவல்துறை செய்தித் தொடர்பாளர் அரியாசாண்டி கூறினார்.
குட்டா கடற்கரையில் பிரச்சினையைச் சமாளிக்க சிறப்புப் பணி படை ஒன்று நிறுவப்படும் என்று பாலி ஆளுநர் வயான் கோஸ்டர் கூறினார். அங்கு தூய்மைப்பணி தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என்றும் அப்பணியில் உள்ளூர் சமூகம், மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் சொன்னார்.

