ரியாத்: சவூதி அரேபியாவில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில் கடைகள் இன்னும் திறக்கப்படாதபோதும் அங்கு கூட்டம் திரண்டது. அங்கு குளிர்சாதன வசதிகள் இருப்பதே அதற்குக் காரணம். மெதுவோட்டக்காரர்கள் உடற்பயிற்சி செய்யவிரும்பும் இடமாக அது திகழ்கிறது.
அதிக வெப்பத்தால் வெளியில் உடற்பயிற்சி செய்ய முடிவதில்லை என்று கடைத்தொகுதியில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த 55 வயது திரு முகம்மது சுல்தான் கூறினார்.
கடைத்தொகுதி குளிராக உள்ளது என்றும் அதிக தாகம் எடுப்பதில்லை என்றும் அவர் கூறினார். சவூதி அரேபியாவில் கோடைக்காலத்தின் நிறைவைக் குறிக்கும் அக்டோபரில் பகல் வேளையில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசை நெருங்குவதாக அவர் சொன்னார்.
சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் உள்ள கடைத்தொகுதிகளில் அன்றாடம் உடற்பயிற்சி செய்வோரைப் பார்ப்பது வழக்கமாகிவிட்டது.
உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் பலரிடையே வளர்ந்துவரும் ஆர்வத்தை அது காட்டுகிறது.
சவூதி அரேபியர்களில் ஐவரில் ஒருவர் உடற்பருமனாக உள்ளனர். சென்ற ஆண்டு உலக வங்கி வெளியிட்ட ஆய்வறிக்கையில், இது கவலைதரும் விவகாரமாகக் குறிப்பிடப்பட்டது.
உடற்பருமனாக இருப்போர் எண்ணிக்கையைக் குறைக்க, ரியாத்தில் நெடுந்தொலைவு ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்வாண்டு ஆயிரக்கணக்கானோர் அதில் கலந்துகொண்டனர்.

