ஜெனீவா: சுவிட்சர்லாந்தின் கிழக்குப் பகுதியில் வியாழக்கிழமை (செப்டம்பர் 10) பயணம் செய்துகொண்டிருந்த சுற்றுலாப் பேருந்து திடீரென கவிழ்ந்ததில் பலர் உயிரழந்ததோடு பயணிகளுக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்துள்ளது.
மரணம் அடைந்தோர், காயம் ஏற்பட்டோர் ஆகியோரின் எண்ணிக்கையை காவல்துறை வெளியிடவில்லை. மிகவும் மோசமான அவ்விபத்து கிரைசன்ஸ் மாநிலத்தின் சூஷ், செர்நேஸ் என்ற இரு கிராமங்கள் அமைந்துள்ள பகுதியில் நடந்துள்ளது.
அவசர உதவி வழங்க அரசாங்கப் பணியாளர்கள் பலர் அங்கு விரைந்து சென்றுள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் ஊடகங்கள், 48 பயணிகள் அந்தப் பேருந்தில் இருந்ததாகத் தெரிவிக்கின்றன. அனைத்துப் பயணிகளும் ஹாலந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என ஹாலந்தின் ‘ஏஎன்விஆர்’ எனப்படும் பயணத் துறைச் சங்கப் பேச்சாளர் சுவிட்சர்லாந்தின் ‘பிளிக்’ எனப்படும் நாளிதழிடம் தெரிவித்தார்.
சாலையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புக் கம்பத்தைப் பேருந்து மோதியதால் அது கவிழ நேர்ந்தது என்று காவல்துறை பேச்சாளர் விளக்கினார். வேறு வாகனங்கள் விபத்தில் சம்பந்தப்படவில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
பல மருத்துவ வாகனங்களும் ஐந்து ஹெலிகாப்டர்களும் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

